தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்குப் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் டாஸ்மாக் விதித்துள்ளது.
இதன்படி, தனிநபர் ஒருவர் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 4.5 லிட்டர் வரையிலான இந்தியத் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களை மட்டுமே வாங்க முடியும்.
அதாவது, 750 மி.லி அளவு கொண்ட 6 முழு பாட்டில்கள் அல்லது 375 மி.லி அளவு கொண்ட 12 அரை பாட்டில்கள் அல்லது 180 மி.லி அளவு கொண்ட 24 கால் பாட்டில்கள் வரை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மாவட்ட மேலாளர்கள் மூலம் விற்பனையாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதேபோல், பீர் வகைகளைப் பொறுத்தவரை ஒரு நபருக்கு அதிகபட்சமாக 12 பாட்டில்கள் வரை மட்டுமே வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்ட விற்பனை ரசீதுகளின் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என்றும், விதிகளை மீறி அதிகப்படியான மதுபானங்களை ஒரே ரசீதில் விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மொத்த விற்பனைக்கு முறையான வரையறை இல்லை என்று மேற்பார்வையாளர்கள் தெரிவித்த புகாரைத் தொடர்ந்து, இந்தத் தெளிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் குறிப்பாக, சட்டவிரோதப் பயன்பாட்டிற்காகவோ அல்லது கடை நேரத்திற்குப் பிறகோ மதுபானங்களை இருப்பு வைப்பதைத் தவிர்க்கவும், தேர்தல் நேரத்தில் முறைகேடுகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
