மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுத்த தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்பதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இஸ்ரேல், வெறும் 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகளை வீசி லெபனானை நிலைகுலையச் செய்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் போன்ற நாடுகள் லெபனானையும் போர்நிறுத்த எல்லைக்குள் கொண்டுவர முயன்ற போதிலும், வாஷிங்டனும் இஸ்ரேலும் அதற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துவிட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஆகியோர் லெபனான் மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையை வெளிப்படையாகவே ஆதரித்துள்ளனர். “இது ஒரு தனிப்பட்ட மோதல், இதில் ஹிஸ்புல்லா சம்பந்தப்பட்டிருப்பதால் லெபனான் ஒப்பந்தத்தின் ஒரு பகுதி அல்ல” என்று டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டால் மட்டுமே இரண்டு வார கால அமைதி சாத்தியம் என பிரதமர் நெதன்யாகு நிபந்தனை விதித்துள்ள சூழலில், லெபனான் மீதான இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், லெபனான் மண்ணில் ரத்த ஆறு ஓடுவது சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
