மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படுவது குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானுக்கு இனிமேல் ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று சீனா உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த டிரம்ப், அதன் அடிப்படையில் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். “இது சீனாவுக்காகவும், ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் நான் செய்யும் உதவி” எனத் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் வரவிருக்கும் மே மாதத்தில் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்க உள்ளதாகவும், இந்தச் சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக அமையும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் வணிகக் கப்பல்களின் போக்குவரத்துத் தொடங்குவது உலகப் பொருளாதாரத்திற்கும், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்துவதற்கும் மிக முக்கியமானது என்று கருதப்படுகிறது. ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு இறுதி உடன்படிக்கையை நோக்கி நகர்வதை இது உறுதிப்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
