மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தடுத்ததன் மூலம், ஒட்டுமொத்த இந்தியப் பெண்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அநீதி இழைத்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். “பெண்கள் அதிகாரமயமாக்கலுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பைச் சீர்குலைத்ததை நீங்கள் வெற்றியாகக் கொண்டாடுகிறீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் பொன்னான வாய்ப்பை இழந்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடி வழங்கிய 50 சதவீத கூடுதல் இடங்களைப் பெறுவதற்கான வாய்ப்பையும், தமிழகத்திற்கு நியாயமாகச் சேர வேண்டிய 20 மக்களவைத் தொகுதிகளையும் ஸ்டாலின் தவறவிட்டுவிட்டதாக இ.பி.எஸ் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் எதிர்காலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்திவிட்டு எதற்காகக் கொண்டாடுகிறீர்கள் என்று வினவிய அவர், திமுக-வின் இந்தச் செயல் பெண்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் எதிரானது எனத் தனது அறிக்கையில் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
