ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், வரும் வாரத்தில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிய சில மணிநேரங்களிலேயே இஸ்ரேல் இத்தகைய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஈரானின் பயங்கரவாத ஆட்சி மற்றும் அதன் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் படைகள் தீவிரமான தாக்குதல்களைத் தொடுக்கத் திட்டமிட்டுள்ளன.
மறுபுறம், இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா கூட்டு ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளை ஈரான் கொண்டிருப்பதை இந்தத் தாக்குதல் உறுதிப்படுத்தியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் பேசினாலும், அமெரிக்கா கூடுதலாக மூன்று போர்க்கப்பல்களையும் 2,500 வீரர்களையும் அப்பகுதிக்கு அனுப்பி வருவதால், போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
