தமிழ்நாட்டில் தவெக மீது எதிரும் எதிர்பார்ப்பு… சாதிப்பாரா விஜய்…!!!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், வரும் மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள முடிவுகள் யாருக்குச் சாதகமாக அமையும் என்ற விவாதம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, முதல்முறை களம் கண்டுள்ள நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன என்பதே அரசியல் நோக்கர்களின் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.

கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், 2000-ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த ‘ஜென்ஸி’ (Gen Z) தலைமுறை வாக்காளர்கள் அதிகளவில் பங்கேற்றது ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளுடன் நான்காவது சக்தியாகத் தவெக களம் கண்டது இம்முறை போட்டியைப் பலமுனைப் போட்டியாக மாற்றியுள்ளது.

அரசியல் அறிவிப்பு வெளியான நாள் முதல் விஜய் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. “விஜய் தேர்தல் வரை தாக்குப்பிடிக்க மாட்டார், கூட்டணி சேருவார், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் இல்லை” எனப் பலரும் விமர்சித்தனர். இருப்பினும், எடப்பாடி தொகுதி தவிர மீதமுள்ள 233 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்களைக் களம் இறக்கியது. இதில் 106 பேர் மற்ற கட்சிகளிலிருந்து வந்தவர்கள் என்றாலும், தேர்தலைத் தனித்தே சந்தித்தது அக்கட்சித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும், அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது வெறும் ‘நடிகருக்கான கூட்டம்’ என்று விமர்சிக்கப்பட்டாலும், கள நிலவரம் வேறாக இருந்தது.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் வைரலான ஒரு புதிய ட்ரெண்ட் அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளது. பல வீடுகளில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் “விஜய்க்குத்தான் ஓட்டு போட வேண்டும்” என்று பிடிவாதம் பிடித்த நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் செய்திகளாகின. “குழந்தைகளின் ஆசைக்காக இம்முறை வாக்கினை மாற்றப் போட்டோம்” என்று பல பெரியவர்கள் வெளிப்படையாகக் கூறியது தவெக-வின் வாக்கு சதவீதத்தை உயர்த்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.

கருத்துக்கணிப்புகள் திமுக மற்றும் அதிமுகவுக்கு சாதகமாக வந்தாலும், தவெக தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது. “ஒரு பூத்துக்கு 200 ஓட்டுகள் விழுந்தால் கூட, தமிழகத்திலுள்ள 75,026 பூத்துகளில் கணிசமான இடங்களைப் பிடிக்க முடியும்” என்பதே அவர்களின் கணக்காக உள்ளது.

ஆரம்பத்தில் விஜய்யின் ஆதரவாளர்களை ‘தற்குறிகள்’ என விமர்சித்தவர்கள் கூட, தற்போது “ஒரு தொகுதியிலாவது தவெக வெல்லுமா?” என்று கேட்கத் தொடங்கியுள்ளனர்.

அரசியல் களம் எப்போதும் கணிக்க முடியாத ஒன்று. மக்களின் எண்ணவோட்டம் தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும் போது, பழைய கணக்குகள் தவிடு பொடியாகலாம். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவில், விஜய் ‘பந்தயம்’ அடிப்பாரா அல்லது மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிக்கும் காரணியாக மட்டும் இருப்பாரா என்பது தெரிந்துவிடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author