தமிழக சட்டசபை தேர்தல் தோல்வியின் தாக்கம் பாஜக-வுக்குள் இப்போது ‘டிஜிட்டல்’ போராக உருவெடுத்துள்ளது. வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், எல். முருகன் மற்றும் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகிய நால்வர் தான் கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என ஒரு தரப்பினர் பகிரங்கமாகச் சாடி வருகின்றனர்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, இந்த முக்கியத் தலைவர்கள் நால்வரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறி, அவர்களின் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ராஜினாமா கடிதங்கள் வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
உதகையைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், டெல்லி மேலிடம் எடுத்த கூட்டணி முடிவுகளே இந்த நிலைக்குக் காரணம் என கீழ்மட்ட நிர்வாகிகள் குமுறுகின்றனர். “சீனியர் தலைவர்கள் யாரும் சரியாக வேலை செய்யவில்லை” என்ற குற்றச்சாட்டு வலுத்து வரும் நிலையில், இந்த போலி கடித விவகாரம் கமலாய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் நற்பெயரைக் கெடுக்கச் சதி நடப்பதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், தலைமை மாற்றத்தை விரும்பும் சொந்தக் கட்சியினரே இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.
