புளோரிடாவிலிருந்து புறப்பட்ட ‘கரீபியன் பிரின்சஸ்’ என்ற சொகுசுக் கப்பலில் நோரோவைரஸ் வேகமாகப் பரவியதில், 102 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் உட்பட மொத்தம் 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, கப்பல் நிர்வாகம் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவித்தது.
சமீபத்தில் வேறொரு கப்பலில் ஹன்டா வைரஸ் பாதிப்பால் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், இந்த புதிய வைரஸ் பரவல் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கப்பலில் நோய் பரவியதைத் தொடர்ந்து, கிருமி நீக்கம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் குணமடைந்துவிட்டதாகவும், கப்பலில் மற்ற நிகழ்ச்சிகள் இயல்பாக நடைபெற்று வருவதாகவும் பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான உணவு, நீர் அல்லது பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் பரவக்கூடிய இந்த நோரோவைரஸ், சொகுசுக் கப்பல்கள் போன்ற மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களில் எளிதில் பரவும் தன்மை கொண்டது.
மே 11 அன்று கப்பல் கரை திரும்பியதும், அதனை முழுமையாகச் சுத்தம் செய்யத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
