கர்நாடக அரசு பள்ளிகளில் நிலவி வந்த ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடை கட்டுப்பாடுகளை நீக்கி, அம்மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடையை நீக்கி, நடப்பு கல்வி ஆண்டு முதல் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (பி.யூ.சி.) மாணவர்கள் தங்களின் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, மாணவிகள் ஹிஜாப் அணியவும், மாணவர்கள் பூணூல், புனித கயிறு, ருத்ராட்சை மாலை மற்றும் தலைப்பாகை அணிந்து பள்ளிக்கு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நுழைவுத் தேர்வின் போது பூணூல் அணிந்த மாணவர்கள் தடுக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டிய மந்திரி, இனி வரும் நாட்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காது என உறுதி அளித்துள்ளார்.
அரசியல் சாசன மாண்புகளுக்கு ஏற்ப எடுக்கப்பட்ட இந்த முடிவு அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும், மாணவர்களை மத அடையாள ஆடைகளை அணிய வற்புறுத்தவோ அல்லது அகற்றச் சொல்லவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
