தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்குத் தவெக மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். சவால் விடுபவர்கள் வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “வெறும் 5 நாட்களிலோ அல்லது 10 நாட்களிலோ உடனடியாக எப்படி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட முடியும்? மாநிலத்தின் தற்போதைய நிதி நிலைமை (Finance Position) எப்படி இருக்கிறது என்பதை முழுமையாக ஆராய்ந்து, அதற்கான அனைத்து விவரங்களையும் திரட்டிய பிறகுதான் வெள்ளை அறிக்கை கொடுக்க முடியும்” என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், வெள்ளை அறிக்கை என்பது ஏதோ ஒரு வெற்றுப் பேப்பரில் எழுதிக் கொடுப்பது அல்ல என்றும், ‘வெள்ளை அறிக்கை தருகிறோம்’ என்று கூறிவிட்டு வெறும் வெள்ளை பேப்பரை மக்களிடம் காட்ட முடியாது என்றும் சாடியுள்ளார். தவெக முதலமைச்சர் தெளிவான சிந்தனை உள்ளவர், மக்கள் நலம் காக்கக்கூடியவர் என்பதால் அனைத்தும் திட்டமிட்டபடி முறைப்படி நடக்கும் என்று செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
