கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவருக்கு எதிராகப் போடப்பட்ட குண்டாஸ் சட்டம் அக்கிரமமானது என்றும், இந்த விவகாரத்தில் சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அருணின் செயல் முற்றிலும் தவறானது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி அருணுக்குச் சம்மன் கொடுக்க வந்த நீதிமன்றப் பணியாளரை (Court Staff) நீண்ட நேரம் காக்க வைத்தது ஏன் என்றும், இந்த அராஜக செயலுக்காக உங்கள் மீது ஏன் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் நீதிபதி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பிக் கிடுக்கிப்பிடி போட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு, நீதிமன்ற ஊழியரைக் காக்க வைத்ததில் எந்தவித உள்நோக்கமும் இல்லை என்றும், ஐபிஎஸ் அதிகாரி அருண் வேறொரு முக்கிய அரசு நிகழ்வில் கலந்துகொண்டதால் தான் தாமதம் ஏற்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்துத் தன் தரப்பு நியாயத்தை முன்வைத்த ஐபிஎஸ் அதிகாரி அருண், கடந்த 28 ஆண்டுகாலத் தனது நீண்ட காவல்துறை பணிய அனுபவத்தில் தன் மீது இதுவரை ஒரு சிறு புகார் கூட வந்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளர் மிகப்பெரிய பண மோசடியில் (Fraud) ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் இருந்ததன் காரணமாகவே, சட்டத்திற்கு உட்பட்டு அவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதிக்கும், ஐபிஎஸ் அதிகாரிக்கும் இடையே நீதிமன்றத்தில் நடந்த இந்த அனல் பறக்கும் விவாதமும், மோதலும் தற்போது தமிழகக் காவல் துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
