இந்திய அணியின் அலட்சியத்தை வெளுத்து வாங்கிய சடகோபன் ரமேஷ்!

Estimated read time 1 min read

பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் உலக சாம்பியனான இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அயர்லாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்தவொரு சர்வதேச வடிவத்திலும் இந்தியாவை அயர்லாந்து வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

இந்திய அணியின் இந்த அதிர்ச்சித் தோல்வி குறித்துத் தனது யூடியூப் பக்கத்தில் ஓப்பனாகப் பேசியுள்ள முன்னாள் இந்தியத் தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ், இந்திய வீரர்கள் இத்தொடரை மிகவும் அலட்சியமாகக் கையாண்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்விகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் தனது யூடியூப் வீடியோவில் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மைதானத்தின் பெரிய பவுண்டரிகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டும், இந்திய பேட்டர்களுக்கு ஷார்ட் டெலிவரி (Short Delivery) வீசியும் நெருக்கடி கொடுத்த அயர்லாந்து அணியைப் பாராட்ட வேண்டும் என்று சடகோபன் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். “இந்திய அணி இந்த ஆட்டத்தை மிகவும் சாதாரணமாக விளையாடியது அப்பட்டமாகத் தெரிந்தது. அயர்லாந்து தொடர் என்பது ஒரு பிக்னிக் டூர் (Picnic Tour) போன்றது, அதில் எளிதாக வென்றுவிடலாம் என்று நினைத்து, அடுத்து வரவிருக்கும் இங்கிலாந்து தொடரை மட்டுமே அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டனர். ஆனால், இது பிக்னிக் ஸ்பாட் கிடையாது என்பதை அயர்லாந்து இந்தியாவிற்குப் புரிய வைத்துள்ளது” என்று அவர் சாடியுள்ளார்.

மேலும், “இந்த அயர்லாந்து தொடர் முதலில் திட்டமிடப்பட்ட ஒன்றே கிடையாது. இங்கிலாந்து என்ற முதன்மை உணவுக்கு (Main Course) அயர்லாந்து என்பது ஒரு தொடுகறி ஊறுகாய் (Pickle) போன்றதுதான். ஆனால், அந்த ஊறுகாயின் காரத்தைக்கூட இந்தியாவால் தாங்க முடியாமல் போனது அவமானகரமானது. ஓவர் கான்ஃபிடன்ஸ் (Overconfidence) எப்போதுமே ஆபத்தானது. அதனால்தான் நேற்றிரவு இந்தியாவின் கதை முடிந்தது. இந்தியாவுக்குத் தன்னம்பிக்கை இருக்க வேண்டும், ஆனால் அது தலைக்கனமாக மாறக்கூடாது” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பையை வென்று, அதனைத் தொடர்ந்து 3 மாதங்கள் ஐபிஎல் (IPL) எனச் சுமார் 4 மாதங்கள் தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் விளையாடிவிட்டு வந்து, அயர்லாந்திடம் தோற்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ரமேஷ் ஆதங்கம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் குறித்துப் பேசிய அவர், “உலகக்கோப்பையில் இருந்தே இந்திய வீரர்கள் கேட்சுகளைத் தவறவிட்டு வருகிறார்கள், நேற்று உயர் கேட்சுகளையும் (High catches) கோட்டை விட்டனர்.

ஐபிஎல் தொடரில் இருக்கும் ‘இம்பாக்ட் பிளேயர்’ (Impact Player) விதியால் ஃபீல்டிங் செய்யத் தெரியாதவர்கள் பேட்டிங் அல்லது பௌலிங் மட்டும் செய்துவிட்டு ஒளிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வேண்டுமென்றால் நீங்கள் ஒரு நல்ல ஃபீல்டராக இருக்க வேண்டும். ஐபிஎல் விதியால் தப்பித்த பல வீரர்கள் நேற்றைய போட்டியில் ஃபீல்டிங்கில் சொதப்பி அம்பலமாகிவிட்டனர்” என்று சடகோபன் ரமேஷ் மிகத் துல்லியமாகத் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

You May Also Like

More From Author