சிவலிங்க வடிவ கட்டிடக் கலை : 300 ஆண்டுகள் பழமையான படிக்கிணறுக்கு புத்துயிர் – சிறப்பு தொகுப்பு!

Estimated read time 1 min read

கர்நாடகாவில் பல ஆண்டுகளாக குப்பைகளுக்கு அடியில் புதைந்து கிடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கிணறு மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் பெலகாவி தாலுக்காவில் உள்ள முட்டகா கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட காஞ்சவீர் நகரில் அமைந்துள்ளது இந்தப் படிக் கிணறு.

பெலகாவி-சம்பரா மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் படிக் கிணறு சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. மேலிருந்து பார்க்கும்போது சிவலிங்க வடிவில் காட்சியளிக்கும் இந்த கிணறு, சுமார் 80 அடி ஆழமும் 53 கல் படிகளையும் கொண்டுள்ளது. பாரம்பரிய கன்னட கட்டிடக்கலையின் செழுமையைப் பிரதிபலிக்கும் இந்தக் கட்டமைப்பில் பிரம்மாண்டமான தடுப்புச் சுவர்கள், அலங்கார வளைவுகள் மற்றும் மாடங்கள் அமைந்துள்ளன.

சுண்ணாம்பு, வெல்லம் மற்றும் மணல் ஆகியவற்றின் பாரம்பரியக் கலவையுடன் பிணைக்கப்பட்ட கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்தப் படிக்கிணறு, காலங்களைத் தாண்டியும் கலையம்சத்துடன் விளங்குகிறது. இந்தக் கிணற்றின் கட்டமைப்பு பிஜாப்பூர் ஆதில் ஷாஹி கட்டிடக்கலையை ஒத்திருப்பதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இவ்வகையான படிக்கிணறுகள், பயணிகள், வீரர்கள் மற்றும் விலங்குகளுக்குக் குடிநீர் வழங்கவும், ஓய்விடங்களை அமைக்கவும் பாரம்பரியமாக அரச நெடுஞ்சாலைகளின் ஓரமாகக் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒரு காலத்தில் தங்கள் நடவடிக்கைகளைத் திட்டமிடும்போது இந்தக் கிணற்றின் இடுக்குகளுக்குள் ஒளிந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்தப் படிக்கிணறு தான் தலைமுறை தலைமுறையாக இங்குள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் முதன்மையான குடிநீர் ஆதாரமாக விளங்கியதாக கூறப்படுகிறது.

இந்தப் படிக் கிணற்றின் கைவினைத்திறனும், கட்டமைப்பு உறுதித்தன்மையும் சிவலிங்க வடிவம் போன்ற கட்டமைப்பும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன.

30 நாட்களுக்கு முன் வரை வரலாற்று நினைவுச் சின்னமான இந்தப் படிக்கிணறு அடையாளம் காண முடியாத அளவுக்குக் குப்பையும் கூளமுமாக கிடந்தது.

தேங்கிய சேறும் சகதியுமாக பிளாஸ்ட்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் மற்றும் மக்கிய குப்பைகளுடன் அடர்ந்த செடிக் கொடிகளுடன் துர்நாற்றத்தை வீசும் நிலையில் புறக்கணிக்கப்பட்டு இருந்தது.

முன்னாள் முட்டகா கிராம பஞ்சாயத்து தலைவர் உமேஷ் பூரி மற்றும் உள்ளூர்வாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பெலகாவியைச் சேர்ந்த பியாஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த குழுவினர் தூய்மை பணியில் ஒரு மாத காலமாக ஈடுபட்டனர்.

சீரமைப்புப் பணிகள் படிக் கிணற்றை வெளிக்கொண்டு வந்த நேரத்தில் பருவமழை தொடங்கியதால், கிணற்றுக்குள் ஊற்றில் புதிய நிலத்தடி நீர் ஊறி கிணற்றின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்தப் படிக் கிணறு புனரமைப்பு,புறக்கணிக்கப்பட்ட வரலாற்றுத் தளங்களைக் கூட்டு முயற்சியின் மூலம் புத்துயிர் அளிக்கலாம் என்பதையும், அதே நேரத்தில் பாரம்பரிய நீர் வளங்களை மீட்டெடுக்கலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

You May Also Like

More From Author