பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின்சாரக் கட்டணம், கோதுமை விலை உயர்வு மற்றும் அரசு அதிகார முறைகேடுகளுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ஒடுக்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த 60 நாட்களில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னின்று நடத்தும் கூட்டு அவாமி செயல் குழு (Joint Awami Action Committee) என்ற அமைப்பை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளது. அந்த அமைப்பினரையும் அதனுடன் தொடர்புடைய சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் என பலரை அரசு கைது செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுப்பட்ட பலர் வலுக்கட்டாயமாக காணாமல் போயுள்ளனர்.
பாகிஸ்தானின் ‘வலுக்கட்டாய’ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் பல ஆண்டுகளாக நடத்தி வரும் ‘முறையான சுரண்டல் மற்றும் நிர்வாக அடக்குமுறையின்’ ‘நேரடி விளைவு’ தான் இந்தப் போராட்டங்கள் என்று என்று கூறிய இந்தியா, போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் கொடூரத் தாக்குதலையும் வண்மையாக கண்டித்திருந்தது.
ராவல் கோட்டையில் சொந்த மக்களைக் கொடூரமாக சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் இராணுவத்தின் மனிதாபிமானமற்ற செயலில் கொல்லப்பட்ட அல்லது படுகாயமடைந்த பொதுமக்களில் பெரும்பாலோர் 15-16 முதல் 32-35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
மலிவு விலையில் மாவு, மின்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை மட்டுமே கேட்டதற்காக நேரடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
ஜெனரல் ஜியா-உல்-ஹக் மற்றும் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட ராணுவச் சட்டக் காலங்களை நேரில் கண்டிருப்பதாக கூறியுள்ள ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர், இப்போது நடப்பது அதை விட மோசமானது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் இந்த துப்பாக்கிச் சூடு பெரும் அநீதி என்றும் கூறியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் தான் இந்த ஓய்வு பெற்ற ராணுவவீரரும் தனது ஒரே மகனை பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
தலைநகர் முசாஃபராபாத் நோக்கி மாபெரும் பேரணிக்கு அனுமதி மறுக்கப்ப்பட்ட நிலையில் ராவல் கோட்டையில் மக்கள் பெருமளவில் அரசுக்கு எதிராக திரண்டு வருகின்றனர்.
முசாஃபராபாத் நகரில் உள்ள இஸ்லாமிய மதகுருமார்கள் பாகிஸ்தான் படைகள் இழைக்கும் அத்துமீறல்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு காஷ்மீர் மக்களைத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பாக இதே இஸ்லாமிய மத குருமார்கள், ஒரு காலத்தில் பாகிஸ்தானில் ‘பிரகாசமான எதிர்காலம்’ அமையும் என்று கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அப்பாலிருந்து அறிவிப்புகள் வெளியிட்டனர்.
குறிப்பாக எல்லைக்கு அப்பால் இருந்த சலோத்ரி மசூதியிலிருந்து விடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கேட்டு, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றது வரலாறு.
இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பரப்புவதற்கு பாகிஸ்தான் ராணுவமும் ISI-யும் ஒரு காலத்தில் பயன்படுத்திய அதே பகுதி, இப்போது பாகிஸ்தானுக்கு எதிரான புரட்சியைக் காண்கிறது. இது கர்மாவின் பதிலடி என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதான தனது பிடி நழுவி வருவதும் அப்பகுதியில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதும் பாகிஸ்தானுக்கு நடுக்கத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதச் செயல்களைத் தூண்டிவிட்டு கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி செய்யலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
