மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை பிப்.25-ல் கூடுகிறது!

Estimated read time 1 min read

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கைகள் வரும் மார்ச் 14 மற்றும் 15-ம் தேதிகளில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று முன்தினம் வெளியிட்டார். இதையடுத்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு துறைகளின் வல்லுநர்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள், வணிக அமைப்புகளிடம் கடந்த 2 தினங்களாக கருத்துகளை கேட்டு வருகிறார். இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், சிறு, குறு தொழில்துறை மற்றும் பல்வேறு துறை சார்ந்தவர்களிடம் அவர் கருத்துகளை கேட்டறிந்தார்.

இதேபோன்று, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விவசாயிகள், விவசாய சங்கங்களிடம் கருத்துகளை விரைவில் கேட்டறிய உள்ளார். இதற்கான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, வேளாண் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்.25-ம் தேதி காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்களுக்கும், தேர்தலுக்கு முந்தைய முழுமையான பட்ஜெட் கூட்டத் தொடர் என்பதால் புதிய அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பெண்கள், மாணவர்கள் தொடர்பான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும், கூடுதல் பயனாளிகளை சேர்ப்பதற்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, மும்மொழிக் கொள்கை பிரச்சினை, தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது மற்றும் அரசு ஊழியர்கள் பிரச்சினை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இவை தவிர, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விண்ணப்பித்துள்ள சில முக்கிய நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கான ஒப்புதலும் இந்த கூட்டத்தில் வழங்கப்பட வாய்ப்புள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author