Web team
ஆழ்ந்த இரங்கல் .ரோஸ்லின் காலமானார்
மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நீலநிலா பதிப்பகம், 23, க.யி.ச. கிட்டங்கித் தெரு,
விருதுநகர்-626 001. விலை : ரூ. 50. பேச : 94880 01251
*****
நூலாசிரியர் கவிஞர் அ. ரோஸ்லின் அவர்களின் இரண்டாவது நூல். பதிப்பாளர் நீலநிலா செண்பகராஜன் அவர்களின் பதிப்புரை நன்று. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. நூலாசிரியர் அவர்கள் தா. வாடிபட்டி என்ற கிராமத்தில் வசித்த போதும் அவரது சிந்தனை, இயற்கை நேசம் உலகளாவியதாக உள்ளன. பாராட்டுக்கள்.
“என்னை உருவாக்கி, எனக்கான உலகை அறிமுகப்படுத்திய என் அம்மாவிற்கு இந்நூலை சமர்ப்பிக்கிறேன்”
நூலை அம்மாவிற்கு காணிக்கையாக்கி தாய்அன்பை வெளிப்படுத்தி உள்ளார். பிறந்தோம், இறந்தோம் என்று இயந்திர வாழ்க்கை வாழாமல் இயற்கையை ரசித்து வாழ வேண்டும் என்பதை கவிதையில் நன்கு உணர்த்தி உள்ளார்.
மனதால் தீண்டு!
எதைப்பற்றியாவது பேசு
ஊரை விட்டு வெளியே வா !
அண்மை மலையுச்சி ஏறு
தொடு வானத்தை மனதால் தீண்டு
மயில் கூட்டங்களின் நயனம் ரசி
குயிலிடம் சோக விண்ணப்பம் பெறு
நதியின் துடிப்பினை கண்டுகளி
எறும்பின் நேர்கோட்டுடன் சென்று பார்
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியிடம்
சிறை கூட்டுப்புழு வாழ்வு பற்றிக்கொள். கவிதை படித்தவுடன் இவை எல்லாம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகின்றது.
மழை பற்றிய கவிதை நன்று. நூல் முழுவதும் பல்வேறு புதுக்கவிதைகள் இருந்த போதும் மிகவும் பிடித்த கவிதைகளை மட்டும் பதச்சோறாக மேற்கோள் காட்டி உள்ளேன்.
மழை எனும் பெண்!
மழை எனும் பெண்
பொழிந்து கொண்டிருக்கிறாள்
அவள் மனதீன்
ஈரம் படிந்த பக்கங்கள்
மழைத்துளிகளாகி
மண்ணை நனைவிக்கின்றன
மழைத்துளிகளின்
ஒவ்வொரு முகத்திலும்
வலியும், சோகமும்
அப்பியிருக்கிறது.
மழை முடிந்த
அடித்த நாள்
தெருவெங்கும் காலி குடங்கள்தன்னை நீரால் நிரப்பிக்கொள்ள
தணியாத வெம்மையின் வேட்கையுடன் !
மழைநீர் சேகரிப்பது பற்றி மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு வரவில்லை என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். இக்கவிதையின் தலைப்பையே நூலின் தலைப்பாகவும் வைத்துள்ளார். வீணாகும் ஒவ்வொரு துளிகளையும் சேமித்தால் நாட்டில் தண்ணீர் பஞ்சமே வராது என்பது உண்மை.
சூரியனை இதுவரை பல கவிஞர்கள் ஆணாகவே பார்த்து உள்ளனர். இதுவும் ஒரு ஆணாதிக்க சிந்தனையே என்பதை உணர்ந்து முதல்முறையாக சூரியனை பெண்ணாகப் பார்த்துள்ளார், பாராட்டுக்கள்.
சூரியப்பெண்!
காலை விழி பிதுங்க
பகல் பகடியாட
வெயில் விரட்டிக் கொண்டோட
மாலையின் அயற்சியில்
கண் சிவக்க
ஓய்வுக்காய் ஒதுங்கி
வெளியேறுகிறாள்
சூரியப் பெண்.
நூலாசிரியர் கிராமத்தில் வசப்பதால் கிராமிய மொழில்யும் இயல்பாக சில கவிதைகள் வடித்துள்ளார்கள். மனதில் மருதாணி கவிதை கிராமிய மொழியின் நன்று.
புதுக்கவிதையின் வடிவில் எழுதியுள்ள கவிதைகளை கொஞ்சம் செதுக்கினால் அழகிய ஹைக்கூ கவிதைகள் ஆகி விடும். நூலாசிரியர் அ. ரோஸ்லின் அவர்களிடம் ஹைக்கூ கவிதைகள் எழுதிட வேண்டினேன். விரைவில் அவரிடமிருந்து ஹைக்கூ கவிதை நூலும் எதிர்பார்க்கலாம்.
நினைத்தல்!
உன்னை மறக்கத் துடிக்கும்
வேளைகளில்
முன்னை விட அதிகமாய் உன்னை
நினைத்துக் கொண்டிருக்கிறேன் .
மேலே உள்ள புதுக்கவிதையை இப்படி ஹைக்கூவாகவும் எழுதலாம்.
உன்னை மறக்க நினைக்க
கூடுதலாக துளிர்க்கிறது.
உன் நினைவுகள்!
உண்மை தான் காதலர்கள் ஊடல் காரணமாக மறந்துவிட வேண்டும் என்று நினைக்கும் போது மறக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைவுகள் வந்து வாட்டி வதைக்கும் உணர்வை நன்கு புலப்படுத்தி உள்ளார். சங்க இலக்கியக் காட்சிகளை நினைவூட்டும் கவிதை நன்று.
சூரியக் காதல் !
எனதருமை
சூரியக் காதலியே
உன் சினத்தின் கதிர்கள்எனைச் சுட்டெரித்தாலும்
என்றும்
தான் உனைக் கவரும்
ஓசோன் படலம் தான் !
மீண்டும் சூரியனை காதலியாக பெண்ணாகப் பார்த்துள்ள பார்வை புதியது. பாராட்டுக்கள்.
வனம் சென்றால் மனம் லேசாகும் என்பார்கள். கவலைகளை காணாமல் போக வைக்கும் ஆற்றல் காட்டுக்கு உண்டு. இயற்கைக்கு உண்டு.
காடு எனும் தேவதை
புவியின் நரம்புகள் காடாகும்
வளம் தரும் மழையின் வழியாகும்
பறவைகள், விலங்கின் அடைக்கலமே
காடுகளைப் பேணிக் காத்தால் புவி வளம் பெறுமே !
பிரிவு என்பது மிகவும் கொடுமையானது. அன்பான உறவு பிரிந்து விட்டால் அடையும் துன்பத்தை சொற்களால் சொல்லி விட முடியாது. பிரிவு பற்றிய கவிதை நன்று.
பிரிவு !
சூரியனென்றும் சந்திரனென்றும்
மொழிந்திட்டார்
வரவென்றும் செலவென்றும்
வகுத்திட்டார்
வல்லானது படைப்பின்
உறவுண்டு பிரிவுமுண்டு
இது உலக நீதி
பிரிவின் மொழி கண்ணீர்
பிரிவின் மொழி மௌனம் !
பெற்றோர்களிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்பவர்கள் நட்பின் மேன்மை உணர்த்தும் கவிதை நட்பெனும் சிறப்பு.
ஓர் இசையின் சுவாரஸ்யத்துடன்
எழலாம்
எந்நட்பும் ஓர் நாட்டியத்தின் நளினத்துடன்
உதிக்கலாம்
எந்த நட்பும்
ஓர் பறவையின்
ஒலி போல
தோன்றலாம்
எந்த நட்பும்
ஒரு மலரின் ஸ்பரிசமாய
வெளிப்படலாம்
எந்த நட்பும் !
இப்படி நூல் முழுவதும் ரசனைக்குரிய கவிதைகள் நிரம்ப உள்ளன. நூலாசிரியர் அ. ரோஸ்லின் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுவதற்கு வாழத்துக்கள்.