தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் வைத்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தென் மாநில எம்பிக்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கை குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுக் குழு அமைப்பது தொடர்பாக தென் மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்ட திமுக சார்பில் இரண்டு பிரதிநிதிகள் இன்று ஒடிசாவுக்கு சென்றனர்.
திமுக எம்பி தயாநிதிமாறன், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் புவனேஸ்வரத்தில் உள்ள நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தொகுதி மறு சீரமைப்புக்கு எதிரான தென் மாநில எம்பிக்கள் கூட்டுக் குழுவுக்கு பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை கோரியுள்ளனர். நாளை அமைச்சர் பொன்முடி மற்றும் அப்துல்லா ஆகியோர் கொல்கத்தா செல்ல உள்ளனர். மார்ச் 13-ஆம் தேதி அமைச்சர் கே.என் நேரு, ஆர்.என் இளங்கோ ஆகியோர் தெலுங்கானா செல்ல உள்ளனர்.