என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என பாமக நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸிற்கும், கட்சியின் செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு , உட்கட்சி பூசலாக மாறியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைவராஜ நீடிக்க எனக்கு உரிமை இல்லையா? 2026 தேர்தல் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். மேலும், குலசாமி என்று கூறிக்கொண்டே என் நெஞ்சில் குத்துகிறார்கள், எல்லாம் அய்யாதான் என்று சொல்லிக்கொண்டே பாதாளத்தில் தள்ளப் பார்க்கிறார்கள் என்றும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “2026 தேர்தலுக்குப் பின் தலைவர் பதவியை கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது என் மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை வழங்க மாட்டேன். நான் ஒரு நல்ல தந்தையாக வழிகாட்டியாக இருந்திருக்கிறேன் ஆனால் இந்த மாநாடு மற்றும் மாநாட்டிற்கு பிறகு நடக்கின்ற செயல்களை பார்க்கும்போது எனக்கு மிக மிக வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் கட்சியின் கொஞ்சம் கூட குறைவில்லாமல் எனக்கு வருகிற ஆதரவு அதிகமாக உள்ளது.
இந்த தேர்தலுக்குப் பிறகு நான் தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கிறேன் என்று சொல்லியதற்கே நூற்றுக்கு 99% பேர் ஏன் அப்படி ஐயா சொன்னார்கள்? அப்படி சொல்லி இருக்கக் கூடாது? கடைசி வரை அய்யா தலைவராக இருக்க வேண்டும், என்று 99% பேர் சொல்லுகிறார்கள். மீதமுள்ள அந்த (1%) ஒரு சதவீதம் மட்டும் அன்புமணியின் குடும்பத்திற்கு விட்டுவிட்டேன்.. அவர்களுடைய வார்த்தை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப என்னுடைய மூச்சுக்காற்று நிற்கும் வரை அந்த பதவியில் நான் இருப்பேன். என் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் எந்த சூழலிலும் அரசியலுக்கு வரக்கூடாது என கட்சி ஆரம்பிக்கும் போது கூறினேன். ஆனால் அதனை காப்பாற்ற முடியவில்லை. ” என்று தெரிவித்தார்.