புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

Estimated read time 1 min read

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள் மணிமாடம்’, 100 பேர் அமரும் வகையில் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம், வாகன நிறுத்தம், உணவு, காபி அருந்தும் பகுதி என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞரால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.

தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், ரூ.80 கோடி செலவில் வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்டு, புதிய பொலிவுடன் இன்று (ஜூன் 21, 2025) மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருகிறது. முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான “அய்யன் வள்ளுவர் கலையரங்கம்” மேம்படுத்தப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் திருக்குறள்களையும் கலைஞர் கொண்ட அவர்களின் உரை விளக்கத்துடன் 1,330 குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது “குறள் மணிமாடம்”. 100 பேர் அமரும் வசதியுடன் “திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்” இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வருகைபுரியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும், காபி அருந்தும் பகுதியில் 24 பேர் அமரக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.

275.56 சதுர அடி பரப்பளவு கொண்ட நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய வேயா மாடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையிடும் பொதுமக்கள் உள்ளம் மகிழும் வகையில் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author