பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் திருட்டில் ஈடுபடுவதாக எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தங்களிடம் 100% தெளிவான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்கிறது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அணுகுண்டு போன்ற ஆதாரங்கள் இருப்பதாகவும், அவை வெளியானால் தேர்தல் ஆணையம் ஓடி ஒளிய இடம் இருக்காது என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் முறைகேடு நடந்ததாக சந்தேகம் எழுந்ததாகவும், இந்த சந்தேகம் மகாராஷ்டிராவில் மேலும் வலுவடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் வாக்காளர் பட்டியலில் கோடிக்கணக்கான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகள் உயர் பதவியில் இருந்து கீழ்நிலை வரை இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுகிறார்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வு பெற்றாலும் அவர்களை விடமாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து உடனடியாக ஒரு சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.