விண்வெளிக்கு செல்லும் இந்திய வீரர்கள் : அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மேலும் அவர் ரூ.24,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு வைக்கவுள்ளார். இந்நிலையில் இன்று கேரளாவிற்கு சென்ற பிரதமர் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு சென்று பார்வையிட்டார்.

மேலும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்பு வசதி (PIF) உள்ளிட்ட விண்வெளி உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அப்போது, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர்.

இவர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக விண்வெளி செல்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் இன்றைய விழாவில் இந்த நால்வருக்கும் மிஷன் லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த நால்வரும் சாதாரண மனிதர்கள் அல்ல. 140 கோடி இந்தியர்களின் கனவுகளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகும் நான்கு சக்திகள். 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் விண்வெளிக்கு செல்கிறார்.

இந்த முறை நேரமும் நமதே, கவுண்டவுன் நமதே, ராக்கெட்டும் நமதே. இன்று இந்த 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு இந்தியாவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள்தான்.

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும், நிகழ்காலத்தை மட்டுமல்ல, அதன் வருங்கால சந்ததியினரின் எதிர்காலத்தையும் வரையறுக்கும் சில தருணங்கள் உள்ளன. இன்று இந்தியாவிற்கு அது போன்ற ஒரு தருணம்” என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author