சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள் மாநாட்டில், திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களான தந்தை பெரியார் (ஈ.வி.ராமசாமி) மற்றும் சி.என்.அண்ணாதுரையை விமர்சிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
இந்த வீடியோவில், பெரியார் மற்றும் அண்ணாதுரையை இழிவாக சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும், மாநாட்டில் “திராவிட இயக்கத்தை அழித்து தெய்வீக தமிழ்நாடு” உருவாக்க வேண்டும் என்று கூறும் பதாகைகளும், திராவிட தலைவர்களை “நாத்திக நரிகள்” என்று விமர்சிக்கும் கருத்துகளும் இடம்பெற்றன.
இந்த மாநாட்டில் அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், திராவிட இயக்கத்தின் தோற்றத்தை பகிர்ந்து கொள்ளும் அதிமுக, இந்து முன்னணியின் இந்த நிகழ்வில் பங்கேற்றதற்காக கடுமையாக விமர்சித்தன. அதிமுகவின் இந்த செயலை “திராவிட பண்பாட்டுக்கு துரோகம்” என்று திமுக குற்றம்சாட்டியது.
அந்த வகையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த இந்து முன்னணிக்கு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து ‘முருக பக்தர்கள் மாநாடு’ என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை விமர்சித்த இந்து முன்னணிக்கு கடும் கண்டனம். pic.twitter.com/3tpImqEbyC
— O Panneerselvam (@OfficeOfOPS) June 25, 2025