சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார்.
பிறகு, ஜூன் 13 அன்று ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” என்று கூறி, அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், “அன்புமணியை 35 வயதில் ஒன்றிய அமைச்சராக்கியது எனது தவறு,” என்று மே 29 அன்று விழுப்புரத்தில் கூறியிருந்தார். இப்படி இன்னும் இவர்களுடைய பிரச்சினை ஓயாத ஒன்றாக இருந்து வரும் நிலையில், பாமக ஆதரவாளர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ஜூன் 25, 2025 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட் வழங்கப்படும்,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இந்த அறிவிப்பு, கட்சியில் அவருக்கு விசுவாசமாக செயல்படும் நிர்வாகிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை தெளிவாக்குகிறது.
இது குறித்து ராமதாஸ் பேசுகையில் “எம்.எல்.ஏ அருள் எனக்கு துணையாக, என்னோடு தான் பயணிக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக் கூடிய மாநில தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள்,” என்று வலியுறுத்தினார். மேலும், “கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று, நல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்குவேன்,” என்று உறுதியளித்தார்.
அதே சமயம், ராமதாஸ், பாமகவின் எதிர்கால கூட்டணி குறித்தும் நம்பிக்கையுடன் பேசினார். “நாங்கள் அமைக்கப் போகும் கூட்டணி ஒரு நல்ல கூட்டணியாக இருக்கும். அது வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக அமையும்,” என்றும் அவர் தெரிவித்தார்.