கிராம சபை கூட்டத்தில் முதன்முறையாக 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.
அதில் பேசிய அவர், “நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள்தான். விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் காந்தி கூறினார். கிராம பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என திட்டங்கள் தீட்டியுள்ளோம். இத்திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை. முல்-அமைச்சராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்.
கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இது கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றும் விழா. குடியிருப்பு, சாலை, தெருக்களில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையில்லா தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
பிளாஸ்டிக் பயன்பாட்டை முடிந்த அளவுக்கு தவிருங்கள். சின்னச் சின்ன விஷயங்களை சரியாக செய்தால், பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்படும். பணத்தை தண்ணீராக செலவழிப்பதாகச் சொல்வார்கள். ஆனால், தண்ணீரைத்தான் பணம் போல் செலவழிக்க வேண்டும். பருவமழையை எதிர்கொள்ள அனைத்து ஊராட்சிகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட |நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும்.
கிராமப்புற முன்னேற்றத்தை சாத்தியப்படுத்தியது சுய உதவிக்குழு திட்டம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் அடுத்தகட்ட பாய்ச்சல்தான் மகளிர் உதவித்தொகை. மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். பெண்கள் முன்னேற்றத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.