இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு மூச்சுத்திணறல் காரணமாக ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 22ஆம் தேதி நல்லகண்ணு வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலைமையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு முன்னணி மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து சுமார் ஒன்றரை மாத சிகிச்சைக்கு பின் நல்லகண்ணு அக்டோபர் 10ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
அப்போது மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் பேசுகையில், நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் போன்ற மருத்துவ உதவிகள் தேவைப்படவில்லை. வயது மூப்பு காரணமாக சிகிச்சை மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து தேவைப்படுகிறது. வீட்டில் இருந்தபடியே இந்த சிகிச்சைகளை பெற முடியும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் வீடு திரும்பிய ஒரு வாரத்தில் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை என்றும் தெரிகிறது. இதனால் விரைவில் அவர் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.