இன்று ஐப்பசி அமாவாசை : பிரிந்தவர்கள் ஒன்று சேர இப்படி வழிபடுங்க..!

Estimated read time 1 min read

ஐப்பசி மாதம் என்பது மழைக் காலத்தின் துவக்க மாதமாகும். சூரிய பகவான், துலாம் ராசியில் சஞ்சரிக்கக் கூடிய மாதம் என்பதால் இதனை துலாம் மாதம் என்றும் சொல்லுவதுண்டு. தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதம் என்பது ஐஸ்வர்யங்களையும், கேட்ட வரங்களையும் அள்ளிக் கொடுக்கக் கூடிய மாதமாக அமைகிறது. குறிப்பாக வீட்டில் செல்வ செழிப்பு குறையாமல் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு மகாலட்சுமியின் அருளை பெறுவதற்குரிய மிக முக்கியமான மாதமாக ஐப்பசி மாதம் கருதப்படுகிறது. மாதங்களிலேயே இது முழுமை பெற்ற மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி துவங்கி, நவம்பர் 16ம் தேதி வரை ஐப்பசி மாதம் உள்ளது.

ஐப்பசி அமாவாசை நாளில் விரதம்

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. ஜோதிடத்தில் சூரியனை தந்தை என்றும் சந்திரனை அன்னை என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.

துலாம் ராசியில் பலம் இழந்து நீசம் பெற்றுள்ள தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது.

குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

நரகாசுர வதம்

கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முடிந்து அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள். தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.

மாங்கல்ய பலம் தரும் விரதம்

பக்தர்கள் இவ்விரதத்தினை மன ஒருமைப்பாட்டுடனும், புனித நோக்குடனும் என்ன வரம் வேண்டி அனுஷ்டிக்கிறார்களோ அந்தந்த வரங்களை அம்பாளின் வேண்டுகோளிற்கு இணங்க சிவன் மிக விரைவாகவே கொடுத்து விடுவார் என்பது பலரது அனுபவ உண்மையாகும். அம்பிகை சிவனை வேண்டி தவமிருந்த விரதம். இதனை திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் வேண்டியும் விரதம் இருக்கின்றனர்.

பிருங்கி முனிவர் அலட்சியம்

ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன் கயிலைநாதன்தான் என்றும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார். சிவனைத்தவிர வேறு யாரையும் சிந்திக்காத அவரது போக்கு பிற கடவுளரை அவமதிக்கும் வகையில் அமைந்ததுண்டு. அப்படி ஒரு நிலை பார்வதிக்கே ஏற்பட்டது. கயிலையில் தன் கணவருடன் அமர்ந்திருக்கும் போது அங்கு வரும் பிருங்கி முனிவர் நேராக வந்து சிவனை மட்டும் வணங்கி வலம் வருவதும், தன்னை திரும்பியே பார்க்காமல் போவதும் கண்டு பார்வதி மனம் வருந்தினாள்.

அன்னை கொடுத்த சாபம்

எப்படியாவது பிருங்கி முனிவர் தன்னையும் வணங்கவேண்டும் என்று எண்ணிய பார்வதி இறைவனை நெருங்கி அமர்ந்து கொண்டாள். வழக்கம்போல கயிலாயம் வந்த பிருங்கி முனிவர் சிவனுடன் நெருக்கமாக பார்வதி அமர்ந்திருந்ததைக் கண்டு கலங்கவில்லை. வண்டு உருவம் எடுத்து இருவருக்கும் இடையில் புகுந்து சிவனை மட்டுமே வலம் வந்தார்.

பார்வதியின் சாபம்

இதனைக்கண்டு ஆத்திரமடைந்த பார்வதி, தன்னை அவமதித்த முனிவரின் கால்கள் முடமாகிப்போகட்டும் என்று சபித்தாள். உடனே அது பலிக்கவே நடக்க சக்தியில்லாமல் முனிவர் தடுமாறினார். ஆனால் தனது பக்தருக்கு நேர்ந்த கதியை கண்ட இறைவன் பிருங்கி முனிவர் ஊன்றி நடக்க ஒரு குச்சியை அளித்தார். தோஷம் நீங்குவதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டார் முனிவர். சக்தியின் மனம் ஆறுதல் அடையும் போது சாபம் நீங்கும் என்றார். சிவனையும் என்னையும் பிரித்து பார்க்க கூடாது என்ன செய்வது என்று நாரதரிடம் கேட்கிறார் பார்வதி. அவரோ கௌதம முனிவரிடம் கேட்க சொல்கிறார். நேராக பார்வதி கௌதம முனிவரை பார்க்கிறார். அதற்கு கௌதம முனிவர் 21 நாட்கள் கேதாரம் என்ற தலத்திற்கு சென்று விரதம் இருக்க சொல்கிறார். அப்படி விரதம் இருந்தால் இறைவரின் இடபாகத்தை பெற்று இருவரும் ஒருவராகலாம் எப்போதும் பிரிய வேண்டியிருக்காது என்று கூறினார்.

பிரியாத வரம் வேண்டும்

கயிலாயத்தில் இருந்து அன்னை பார்வதி பூலோகம் வந்து தவமிருந்தாள். கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார். சிவனை கண்ட பார்வதி ஒருநாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள். பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார். இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒருபாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக்கொண்ட நாள் தான் கேதார கௌரி விரதநாள்.

கணவன் மனைவி ஒற்றுமை

கேதார கௌரி விரதம் இருப்பவர்கள் 21 முடிச்சுகள் கொண்ட காப்பை அணிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு திதிக்கும் ஒரு முடிச்சு என போடுவார்கள். இப்போது 21 நாட்கள் பலரால் விரதம் இருக்க முடிவதில்லை. 3 நாட்கள், ஏழு நாட்கள், ஏன் ஒரு நாட்கள் கூட சிலர் விரதம் இருந்து பூஜை செய்கின்றனர்.

அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும்

இந்நாளில் அம்பிக்கை சிவனை நோக்கி எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுக்கோளை ஏற்று அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார். இந்த ஆண்டு ஐப்பசி அமாவாசை தினம் செவ்வாய்கிழமை அக்டோபர் 25ஆம் தேதி வருகிறது. எனவே ஒற்றுமையுடன் வாழ நினைக்கும் தம்பதியர் இந்த விரதம் அனுஷ்டிக்கலாம். கேதார கௌரி விரதத்தை கடைபிடிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமை ஒழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.

Please follow and like us:

You May Also Like

More From Author