2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்றும் கேப்டன் இருக்கும்போது அவர் செய்த உதவியையும், நல்ல மனதையும் யாரும் புரிந்துகொள்ளவில்லை என்றும் என்னை பெண் பார்க்க வந்த போது சபரிமலைக்கு கேப்டன் மாலை அணிந்து சன்னியாசியாக தான் வந்தார் என்றும் மதுரையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

மதுரை தேமுதிக வடக்கு மாவட்டம் சார்பாக ஊமச்சிக்குளம் பகுதியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் “உள்ளம் தேடி இல்லம் நாடி” தேர்தல் பரப்புரையில் பேசியபோது,”தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் 4 கட்ட பயணம் முடிவடையும் போது தேர்தலுக்கு முன் அனைத்து தொகுதிகளுக்கும் சென்ற ஒரே கட்சியாக தேமுதிக வாக தான் இருக்கும். எத்தனையோ தோல்விகள், எத்தனையோ வெற்றிகள், எத்தனையோ துரோகங்களை கடந்து தொண்டர்களின் ஆதரவோடு மகத்தான கழகமாக தேமுதிக உள்ளது.
கேப்டன் மறைந்த போது தேமுதிக அவ்வளவு தான் என்று சொன்னவர்கள் இன்று வாய் அடைத்து போயுள்ளார்கள். எல்லா இடத்திலும் பூத் கமிட்டி அமைத்து ஆண்ட கட்சிக்கு இணையாக உள்ளோம். 2026 தேர்தல் வரும்போது மீண்டும் வெற்றிக் கூட்டணியுடன், வெற்றி வேட்பாளருடன் மக்களை சந்திப்பேன். இந்த தேர்தலில் நீங்கள் எல்லோரும் விரும்பும் கட்சியில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.
ஜனவரி 9 ஆம் தேதி உலகமே திரும்பிப் பார்க்கும் அளவில் மாநாட்டை நடத்தவுள்ளோம். கடையேடு வள்ளல்கள் வாழ்ந்த மதுரை பூமியில் 7 வது வள்ளலாக எம்.ஜி. ஆரும், 8 வது வள்ளலாக கருப்பு எம்.ஜி.ஆர் கேப்டன் இருந்துள்ளார். கேப்டன் இருக்கும்போது அவரின் அருமை தெரியவில்லை. அவர் செய்த உதவியையும், நல்ல மனதையும் யாரும் புரிந்துகொள்ளவில்லை. அவர் மறைந்த பின்பு தான் தெரிகிறது. இப்போது எந்த யூடியூப் திறந்தாலும் கேப்டன் கேப்டன் தான். பசித்த வயிறுக்கு உணவளித்தவர் கேப்டன். கார்த்திகை மாதம் விரதமிருந்து 30 ஆண்டுகள் கேப்டன் சபரிமலைக்கு சென்றுள்ளார். இன்று ஐயப்பன் பக்தர்களை பார்க்கும் போது கேப்டன் நினைவு தான் வருகிறது. என்னை பொண்ணு பார்க்க வந்த போது மாலை அணிந்து சன்னியாசியாக தான் வந்தார் விஜயகாந்த். எங்களுடைய எல்லா நல்ல விஷயமும் மதுரையில் இருந்து தான் தொடங்குவது என சொல்வேன். அவருடைய ரத்தத்தில் உரியது மதுரை தான். 2026 தேர்தல் வெற்றிக்கு அச்சரமாக அமைய அனைவரும் ஜனவரி 9 மாநாட்டில் பங்கேற்ற வேண்டும்” என்றார்.
