தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த நவம்பர் 19ஆம் தேதி கோவையில் நடந்த தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பலதரப்பட்ட விவசாயிகளின் பங்களிப்பைப் பாா்த்து வியந்ததாக கூறியுள்ளார்.
விஞ்ஞானிகள், முதல்தலைமுறை பட்டதாரிகள், அதிக சம்பளம் தரும் பெருநிறுவன வேலைகளை விட்டு வந்தவர்கள் உள்ளிட்டோரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் முயற்சிகள் அபாரமானது என பாராட்டியுள்ள பிரதமர் மோடி,
ஒரு விவசாயி 10 ஏக்கா் நிலத்தில் வாழை, தேங்காய், பப்பாளி, மிளகு, மஞ்சள் எனப் பல பயிா்களைப் பயிரிட்டுள்ளார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக நாம் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைச் சாா்ந்து இருப்பதால் மண்ணின் வளம், அதன் ஈரப்பதம் பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் மற்றும் திடீா் வானிலை மாற்றங்களை சமாளிக்க இயற்கை வேளாண்மை பயிா்களுக்கு வலிமையைத் தருகிறது என்றும், தேசிய இயற்கை வேளாண்மை இயக்கம் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார்.
நம் பாரம்பரிய அறிவு, அறிவியல் ரீதியான அங்கீகாரம், அரசின் ஆதரவு ஆகியவை ஒன்றாக இணையும்போது இயற்கை வேளாண்மை நிச்சயமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக மாறும் என பிரதமா் மோடி கூறியுள்ளாா்.
