‘பராசக்தி’ படத்தைப் பார்த்த பிறகு தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைப் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ் திரைப்படத்தில் ‘தமிழ் வாழ்க’ என்று ஒரு சத்தம் கேட்பது வியக்க வைத்தது. மொழிப் போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியைப் பிடித்த திமுக, இந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை” என்று மாநில அரசை விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய சீமான், தமிழர்களின் கட்டிடக்கலை குறித்துப் பேசுகையில், “உலகிலேயே தஞ்சை பெரிய கோவிலில் மட்டும்தான் நிழல் கீழே விழாது” என்று தெரிவித்தார்.
சீமான் பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் கூறிய தகவல் தவறு என்று நெட்டிசன்கள் ஆதாரங்களுடன் பதிவிட்டு வருகின்றனர். “தஞ்சை பெரிய கோவில் கோபுர நிழல் காலையில் மேற்கிலும், மாலையில் கிழக்கிலும் தரையில் விழத்தான் செய்யும். உச்சி வெயிலின் போது மட்டுமே நிழல் கோபுரத்தின் அடிப்பகுதிக்குள்ளேயே விழும்” என்று புகைப்படங்கள் மற்றும் அறிவியல் தரவுகளுடன் சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.
