கென்யா நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணான ட்ரூபென் முதோனி, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 72 மணி நேரம் இடைவிடாமல் மரத்தைக் கட்டிப்பிடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை கென்யாவின் நியேரி ஆளுநர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் மூலம், மிக நீண்ட நேரம் மரத்தைக் கட்டிப்பிடித்தவர் என்ற கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் அவர் இடம் பிடித்துள்ளார்.
நவீனத் தொழில்நுட்பங்கள் பெருகினாலும், பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தி மரங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை உலகுக்கு உணர்த்துவதே தனது நோக்கம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலரான முதோனி இதற்கு முன்பாக கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 48 மணி நேரம் மரத்தைக் கட்டிப்பிடித்து ஒரு சாதனையைச் செய்திருந்தார். தற்போது அந்தச் சாதனையை முறியடித்து சுமார் 24 மணி நேரம் கூடுதலாகப் போராடி 72 மணி நேரப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதற்கு முன்னதாக 2024-ஆம் ஆண்டு மே மாதம் கானா நாட்டைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் அவால் என்பவர் 24 மணி நேரம் 21 நிமிடங்கள் மரத்தைக் கட்டிப்பிடித்ததே உலக சாதனையாக இருந்தது. தனது சாதனையைத் தொடர ஐந்து மாதங்களாக நடைப்பயிற்சி உள்ளிட்ட கடும் பயிற்சிகளைச் செய்ததாகவும், இது மனதளவில் தனக்குப் பெரும் வலிமையைத் தந்ததாகவும் முதோனி குறிப்பிட்டுள்ளார்.
