வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கவுள்ள 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எட்டப்படாமல் உள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களைக் கூறி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவாக, பாகிஸ்தானும் இத்தொடரைப் புறக்கணிக்கலாமா அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் தவிர்க்கலாமா எனப் பல்வேறு கட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இது குறித்த இறுதி முடிவை பாகிஸ்தான் அரசு வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) அறிவிக்க வாய்ப்புள்ளதாக நக்வி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷீத் லத்தீப் இந்த விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். “இரும்பு சூடாக இருக்கும்போதே அடித்திருக்க வேண்டும்; ஐசிசி கூட்டத்தின்போதே பாகிஸ்தான் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ள அவர், இப்போது புறக்கணிப்பு செய்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், “இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்று அரசாங்கம் உத்தரவிட்டால், அதை ஐசிசி ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்; இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்திக்க நேரிட்டாலும், ‘நாங்கள் விளையாட மாட்டோம்’ என்று கூறும் துணிச்சல் வேண்டும்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி ஏற்கனவே இலங்கைக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அரசியல் ரீதியான முடிவுகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
