தமிழக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பகுதிநேர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் மாதாந்திர தொகுப்பூதியத்தை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே 5,000 ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு இந்த உயர்வில் மாற்றமில்லை என்றும், இதற்கான செலவினங்களை கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் மாநில நிதிக்குழு மானியத்திலிருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாளர்களின் எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்து ஒதுக்கீடு செய்வார்கள் என்றும், அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே ஊராட்சிகள் பணியில் அமர்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கையாக, இனிமேல் ஒவ்வொரு விசைப்பம்புக்கும் தனித்தனி இயக்குபவர்களை நியமிப்பதைத் தவிர்த்து, ஒருவரே இரண்டு அல்லது மூன்று விசைப்பம்புகளை இயக்கும் வகையில் பணிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
முற்றிலும் தற்காலிகமான இப்பணியில் இருப்பவர்கள், தினசரி வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதோடு, தேவைக்கேற்ப தண்ணீரில் குளோரின் கலப்பது மற்றும் நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாகச் சுத்தம் செய்வது போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
