தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதோடு, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மேலும் முறையான சட்டம் – ஒழுங்கு டிஜிபி நியமிக்கப்படாததே இத்தகைய குழப்பங்களுக்குக் காரணம் என்று சாடிய அவர், தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக் கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை என்றும், இதனால் அரசு ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள அதே வேளையில், திமுக அரசு மக்கள் மீது கடும் வரிச்சுமையை சுமத்தி வருவதாக இ.பி.எஸ் சாடினார். குறிப்பாக, வீட்டு வரி 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருப்பதையும், மின்கட்டணம் பலமடங்கு அதிகரித்திருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக அரசின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க, வரும் தேர்தலில் மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து அதிமுகவினர் திரளான அளவில் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
