ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் மோதல், இப்போது பெரும் போராக உருவெடுத்துள்ளது.
நேற்று இரவு காபூலில் உள்ள 2,000 படுக்கைகள் கொண்ட போதைப்பொருள் மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் விமானப்படை நடத்திய கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதலில், குறைந்தது 400 பேர் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
சுமார் 250 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை வளாகமே இடிபாடுகளுக்குள் சிக்கிப் போயுள்ளது. காபூலின் முக்கியப் பகுதிகளான ஷார்-இ-நாவ் மற்றும் வஜீர் அக்பர் கான் பகுதிகளில் நள்ளிரவில் கேட்ட அந்த வெடிச்சத்தம், அப்பகுதி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு தலீபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது, இது ஒரு மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்” எனத் தலீபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கொந்தளித்துள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள பாகிஸ்தான், தாங்கள் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கியதாகக் கூறி நியாயப்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் தங்களது பிடியில் உறுதியாக இருப்பதால், ஆசியப் பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்துள்ளது
