நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி மீது தங்களுக்கு மிகுந்த அன்பு இருப்பதாகவும், அவர் விஜய்க்கும் ஒரு தலைவர் தான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
“மிரட்டல்” என்று தான் குறிப்பிட்டது, ரஜினியை நேரில் அழைத்து மிரட்டியதை அல்ல, மாறாக திமுகவினர் அவர் மீது பரப்பிய கீழ்த்தரமான அவதூறுகளையே அப்படிச் சொன்னதாகத் தெரிவித்தார்.
தனது பேச்சால் ரஜினிக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மேலும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று யார் வந்தாலும் அவர்களைச் சிறுமைப்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி பெண் மரணம் போன்ற முக்கியப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே தனது பேச்சைத் தவறாகப் பரப்பியதாக அவர் கூறினார்.
விஜய்க்குத் துணை முதல்வர் பதவி மற்றும் 80 தொகுதிகள் எனப் பல ஆஃபர்கள் வந்தும், மக்கள் நலனுக்காக அவர் அதை மறுத்துவிட்டதாகவும், 2026 தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
