திமுகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம் என்றும், அதற்காகவே ஜெயலலிதாவின் விசுவாசிகள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்திருப்பதாகவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விஜய் தனது உரையில் அதிமுகவை ஊழல் கட்சி என்று விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டிய தினகரன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை ரோல் மாடலாகக் கொள்ளும் விஜய், திமுகவை வீழ்த்தும் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கூறினார்.
ஓபிஎஸ் தனது அண்ணன் போன்றவர் என்றும், பிரிந்து நின்றதால் கடந்த தேர்தலில் தோல்வியைத் தழுவினோம், ஆனால் தற்போது அந்தத் தவறை உணர்ந்து வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
டெல்லி செல்வது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், திமுகவினர் டெல்லி சென்றால் அமைதியாக இருப்பவர்கள், தாங்கள் சென்றால் மட்டும் அழுத்தம் என்று பேசுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
செங்கோட்டையன் போன்றவர்கள் மாற்றுக் கட்சிக்குச் சென்றது வருத்தமளித்தாலும், தனிநபர்களால் இயக்கத்தைப் பாதிக்க முடியாது என்று அவர் உறுதிபடக் கூறினார்.
இது வெறும் தேர்தலுக்கான கூட்டணி மட்டுமல்ல, தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் நல்லாட்சியைக் கொண்டு வருவதற்கான முயற்சி என்றும், தங்களுக்குள் எவ்வளவு குழப்பம் விளைவிக்க நினைத்தாலும் அது நடக்காது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
