தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக உடனான கூட்டணி பங்கீடு குறித்த விவாதங்கள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி. சண்முகம், வரும் தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகளைப் பெற அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய பி. சண்முகம், “வரும் தேர்தலில் இரட்டை இலக்கத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; அதற்கான நியாயமான கோரிக்கைகளை திமுக தலைமையிடம் முன்வைப்போம்” என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் திமுக தலைமையிலான அணி 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிபிஐஎம்-மின் இந்த ‘இரட்டை இலக்க’ கோரிக்கை, கூட்டணிக்குள் மற்ற கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
