உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா விரைவுச் சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
மதுரா மாவட்டத்தில் உள்ள சுரிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று (பிப். 07) அதிகாலை சுமார் 2.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சாலையோரத்தில் பயணிகள் சிலர் நின்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையோரம் நின்றிருந்த பயணிகள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிவேகமாக வந்த வாகனத்தால் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
