தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வரும் மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக முன்கூட்டியே சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் “தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தான் அமையப் போகிறது என மக்கள் பரவலாகப் பேசத் தொடங்கிவிட்டனர்; இந்த மாற்றம் புதுச்சேரியிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்திப் பேசிய அவர், தமிழகம் ஒரு அற்புதமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கூறினார்.
மேலும் அ.தி.மு.க. பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் என்றும், எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். சனிபகவானை வணங்கிவிட்டுத் தேர்தலைச் சந்திப்பது தங்களுக்குச் சாதகமான வெற்றியைத் தேடித்தரும் எனத் தெரிவித்த ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்துக்கள், அரசியல் வட்டாரத்தில் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.
