விமானப் பணிப்பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்ட புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் நகராட்சியின் 6-வது வார்டு திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில், மதுபோதையில் இருந்த இவர்கள் இருவரும் பணிப்பெண்ணிடம் அவரது ஊர் குறித்துக் கேட்டு கிண்டல் செய்ததோடு, ஒருமையில் பேசி அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பணிப்பெண் அளித்த புகாரின் பேரில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய இருவரையும் மீனம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி விதிகளுக்கு மாறாகச் செயல்பட்டதாகக் கூறி பிரபாகரன் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பிரபாகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
