நடுக்கடலில் படகு கவிழ்ந்ததில் 53 அகதிகள் பலி..!

Estimated read time 0 min read

ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காம்பியா மற்றும் செனகல் ஆகியவற்றைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், ஒரு சிறிய ரப்பர் படகில் லிபியா கடற்கரையிலிருந்து ஐரோப்பிய நாடான இத்தாலியை நோக்கிப் புறப்பட்டனர். நடுக்கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, திடீரெனப் படகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் படகு மேற்கொண்டு நகர முடியாமல் கடலின் நடுவே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக எழுந்த ராட்சத அலைகள் படகின் மீது பயங்கரமாக மோதின. இதில் நிலைதடுமாறிய அந்தச் சிறிய படகு கடலில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் படகில் இருந்த 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்த மீட்புக் குழுவினர், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 40 பேரை உயிருடன் மீட்டனர்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பல நாடுகளில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் நீடித்து வரும் உள்நாட்டுப் போர்களே இத்தகைய ஆபத்தான பயணங்களுக்கு முக்கியக் காரணமாகின்றன. வாழ்வாதாரத்தைத் தேடியும், உயிர் பிழைக்கவுமே அந்த நாட்டு மக்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையத் துணிகின்றனர்.

முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத சிறிய படகுகளில் அதிகப்படியான நபர்களை ஏற்றிச் செல்வதால், இது போன்ற விபத்துகள் லிபியக் கடற்பரப்பில் தொடர்கதையாகி வருகின்றன. தற்போது மீட்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Please follow and like us:

You May Also Like

More From Author