காஞ்சிபுரம் புதுச்சேரி ஈரோடு சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய். அதன் தொடர்ச்சியாக இன்று பிப்ரவரி 23ஆம் தேதி வேலூர் மாவட்டம் அகரம் ஏரியில் விஜயின் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே சேலத்தில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நடைபெறும் சந்திப்பு கூட்டத்தில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு காவல்துறை தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபதனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுரை:
- தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அதிகபட்சம் 4,900 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த நிகழ்ச்சி மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும்.
- பாதுகாப்பு காரணங்களால் கர்ப்பிணி பெண்கள், சிறுவர்-சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மேலும், விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- QR குறியீடு கொண்ட அனுமதி சீட்டு தேர்வு செய்யப்பட்ட கழக நிர்வாகிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
- ஊடக பிரதிநிதிகளுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், நடைபெறும் இடத்தில் ஊடகங்களும் தனிநபர்களும் ட்ரோன் பயன்படுத்த அனுமதி இல்லை.
- QR அனுமதி சீட்டு பெற்றுள்ள கழக நிர்வாகிகளுக்காக குடிநீர், மருத்துவ உதவி உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
- அனுமதி சீட்டு இல்லாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் விஜய் வருகையால் விழாக் கோலம் பூண்டுள்ளது.
டாஸ்மாக்கை மூட ஆட்சியர் உத்தரவு
இதனைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் இடத்தை வேலூர் மாவட்ட SP நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவருடன் சென்ற செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் , மாவட்டம் அகரம்சேரியில் இன்று நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை இன்று மாலை 6 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர்சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த நடவடிக்கை முன்னெச்சரிக்கை என்று கூறப்படுகிறது.
