தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது…
இந்தியாவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், சுமார் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் துறைமுகத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், கடல்சார் வரலாற்றைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, வ.உ.சிதம்பரனாரின் வீர வரலாற்றையும் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தையும் இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில், சுமார் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 85 கோடி ரூபாய் மதிப்பில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 60 டன் இழுவைத்திறன் கொண்ட புதிய இழுவைப்படகு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
துறைமுகத்தை முழுமையாகப் பசுமைத் துறைமுகமாக மாற்றும் நோக்கில், 158 கோடி ரூபாய் செலவில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும், மெய்நிகர் கண்காணிப்புக்கான டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புக்கான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டும் என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
