தமிழகத்தில் மார்ச் 2026-ல் நடைபெறவுள்ள மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பல்வேறு சலுகைகளையும், வழிகாட்டுதல்களையும் அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,
பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும், வழக்கமான தேர்வு நேரத்துடன் கூடுதலாக 1 மணி நேரம் (60 நிமிடங்கள்) வழங்கப்பட வேண்டும். கூடுதல் நேரத்தைப் பயன்படுத்த விரும்பாத மாணவர்கள், வழக்கமான 3 மணி நேரத் தேர்வு முடிந்தவுடன் உரிய படிவத்தில் கையெழுத்திட்டு தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர்.
அதன் பிறகு தரைத்தளம் கோரியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, எவ்வித சிரமமுமின்றி தரைத்தளத்திலேயே தேர்வு எழுத இருக்கை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சொல்வதை எழுதுபவர் சலுகை பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களைத் தேர்வு மையம் வாரியாகத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
கற்றல் குறைபாடு (டிஸ்லெக்ஸியா) உள்ள மாணவர்கள் தாங்களாகவே தேர்வு எழுதினால், அவர்களின் விடைத்தாளின் முதல் பக்கத்தில் “டிஸ்லெக்ஸியா தேர்வர்” எனச் சிவப்பு மையால் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களின் விடைத்தாள்களிலும் அவ்வாறே சிவப்பு மையால் அடையாளப்படுத்தப்பட வேண்டும். இது திருத்தும் பணியின் போது மாணவர்களுக்கு உரிய சலுகை கிடைக்க வழிவகுக்கும்.
வழக்கமான தேர்வு நேரம் (பிற்பகல் 1.15 மணி) முடிந்த பிறகும், கூடுதல் நேரம் எழுதும் மாணவர்கள் உள்ள அறைகளைப் பறக்கும் படை உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேர்வு முடிந்ததும் இம்மாணவர்களின் விடைத்தாள்களைத் தனி உறையிலிட்டு முதன்மைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் எவ்வித மன அழுத்தமுமின்றி, எளிதாகத் தேர்வை எதிர்கொள்வதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
