தனியார் பள்ளிகளில் அரசியல் கூட்டங்கள், மதப் பிரச்சாரங்கள் மற்றும் மாணவர்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் செயல்படுவதற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட விதிகளை அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளது.
சாதி, இனம், மொழி அல்லது மதம் சார்ந்த அடிப்படையில் மாணவர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தும் எந்தவொரு நிகழ்ச்சியும் பள்ளிகளில் நடத்தக்கூடாது என்று அந்த உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளையில், கலாச்சார விழாக்கள், சமூக சேவை, ரத்த தான முகாம்கள் போன்ற பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பள்ளிகளில் நடத்தத் தடையேதுமில்லை.
ஆனால், இத்தகைய நிகழ்ச்சிகள் முற்றிலும் மதச்சார்பற்ற முறையிலும், எவ்வித அரசியல் சாயமும் இல்லாமலும் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் முன்பு, பள்ளிகள் உரிய அரசு அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என்பதையும் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
