அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், அண்மையில் கட்சியில் மீண்டும் இணைந்தவருமான வெல்லமண்டி நடராஜனுக்கு, கட்சியின் ‘அமைப்புச் செயலாளர்’ பதவியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வரும் வெல்லமண்டி நடராஜன், ஜெயலலிதா அமைச்சரவையிலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையிலும் (2016-2021) சுற்றுலாத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதலின் போது, ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) பக்கம் நின்றதால், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, ஓ. பன்னீர்செல்வம் அண்மையில் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வெல்லமண்டி நடராஜன், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட என்னால், கொள்கை மாறுபட்ட திமுகவில் பயணிக்க முடியாது” எனத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த மாத இறுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
மீண்டும் தாய் கழகத்திற்குத் திரும்பிய அவருக்கு, தற்போது கௌரவமிக்க ‘அமைப்புச் செயலாளர்’ பதவியை வழங்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் திருச்சி மண்டலத்தில் கட்சியின் பலத்தைப் பெருக்கும் நோக்கில் இந்தப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
