மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக நிகழ்ச்சிக்கு கட்சியினரை அழைத்து வர, விதிகளை மீறி பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டதால், போதிய பேருந்துகளின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை பயணிகள் காத்துக்கிடந்தனர். போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் தனியார் பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டது. 500க்கும் மேற்பட்ட அரசுப்பேருந்துகள், திமுக நிகழ்ச்சிக்காக இயக்கப்பட்டதால், மதுரையிலிருந்து பல்வேறு வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பேருந்து நிலையத்திலேயே காத்துக்கிடந்தனர்.
இதனிடையே, மதுரை மேலூரில் இருந்து பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு இரவு நேரத்தில் இயக்கப்படும் 20க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் திமுக-வினரை அழைத்துச் செல்ல இயக்கப்பட்டதால், போதிய பேருந்துகள் இன்றி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அன்றாட பணிகள் முடித்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பேருந்து நிலையத்திலேயே நீண்டநேரமாக காத்திருந்தனர்.
