ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, பாரசீக வளைகுடாவில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ரஷியா, சர்வதேச நாடுகளுக்கு பெருமளவில் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.
மேலும் உக்ரைன் போரின் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டிருந்த ரஷியாவின் எண்ணெய் வணிகத்திற்கு, இந்த மத்திய கிழக்கு போர்ச் சூழல் ஒரு புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதனால் ஜெர்மனியைச் சேர்ந்த ‘அர்ஜ்வால்டு’ அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தப் போர்ச் சூழலைப் பயன்படுத்தி ரஷியா இதுவரை சுமார் 7 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 64 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது.
இது கடந்த மாத ஏற்றுமதியை விட 14 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடின்றி எண்ணெய் வழங்கும் ரஷியாவிடம் இருந்து பல நாடுகள் தற்போது அதிக அளவில் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளன.
