சென்னை : தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று மீண்டும் சந்தித்தார். நேற்று ஆட்சியமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து, இன்று ஆளுநர் அழைப்பின் பேரில் இரண்டாவது முறையாக சந்திப்பு நடைபெற்றது.
ஆளுநர் மாளிகைக்கு விஜய் காரில் வந்தபோது, போலீசார் அவரது வாகனத்தை மட்டும் உள்ளே அனுமதித்தனர். அவருடன் வந்த தவெகவினரின் பிற வாகனங்கள் வெளியே நிறுத்தப்பட்டன. சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில், ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.விஜய் நேற்று ஆளுநரிடம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்த்து 112 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை சமர்ப்பித்திருந்தார்.
இன்றைய சந்திப்பில், தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் தனிப்பெரும் கட்சியாக உள்ளதைச் சுட்டிக்காட்டி, ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் விஜய் விளக்கம் அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆளுநர் அர்லேகர், “113 எம்எல்ஏக்களுடன் எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? மீதமுள்ள ஆதரவை வேறு எந்தக் கட்சியிடம் இருந்து பெறப் போகிறீர்கள்? பெரும்பான்மை கிடைக்கும் எனும் யூகத்தின் அடிப்படையில் மட்டும் ஆட்சி அமைக்க முடியுமா?” என்று கேள்விகள் எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் அடுத்தகட்ட முக்கிய முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக தரப்பில், தனிப்பெரும் கட்சியாக உள்ளதால் ஆட்சியமைக்க உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது. ஆளுநர் அர்லேகர், அரசியலமைப்பு ரீதியான அம்சங்களை கருத்தில் கொண்டு முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
