மத்திய கிழக்கில் போர் 20-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரான ஹைஃபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.
புதன்கிழமை அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயல் சேதமடைந்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை (மார்ச் 19) நடத்தப்பட்ட இந்த பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததோடு, மின் இணைப்புகளும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டன. இருப்பினும், பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் ஏவுகணைகள் தடுத்து அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தொடர் மோதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 115 டாலரைத் தாண்டியுள்ளது.
ஈரான் தனது அண்டை நாடுகளான கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிலையங்களையும் குறிவைக்கக்கூடும் என்பதால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தங்கள் நாட்டின் உள்கட்டமைப்புகள் மீண்டும் தாக்கப்பட்டால் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிப் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் எச்சரித்துள்ளார்.
